Anti-Hooliganism Act : 6 விவசாயிகள் மீதான குண்டர் தடுப்பு சட்டம் ரத்து

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வன்முறை போராட்டத்தில் ஈடுபட்ட 6 விவசாயிகள் மீது விதிக்கப்பட்ட குண்டர் தடுப்புச் சட்டத்தை (Anti-Hooliganism Act) ரத்து செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

செய்யாறில் தொழிற்பேட்டை :

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டத்தில் முதற்கட்டமாக 645 ஹெக்டரில் ஷிப்காட் தொழிற்பேட்டை தொடங்கப்பட்டுள்ளது. தற்போது 13 நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் 27,432 பேர் நேரடியாகவும், 75,000 பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். அதே பகுதியில், இரண்டாம் கட்டமாக, 2300 ஹெக்டர் பரப்பளவில், சிப்காட் தொழில் பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது 55 நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் நேரடியாக 31,645 பேரும், மறைமுகமாக 1,00,000 பேரும் பயனடைகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் பெரிய அளவில் தொழிற்சாலைகள் இல்லாத நிலையில், மேற்குறிப்பிட்ட சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்பட்டதன் மூலம், செய்யாறு மற்றும் வெம்பாக்கம் வட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.

குறிப்பாக, பல கிராமங்களைச் சேர்ந்த அடித்தட்டு மக்களும், மகளிர்களுக்கும் அதிக வேலை வாய்ப்புகள் கிடைக்க பெற்றுள்ளன. இந்த தொழிற்பூங்கா அமைக்கப்பட்டதால், இப்பகுதி மக்களின் குடும்பங்கள் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைந்து வாழ்கின்றனர். மேற்குறிப்பிட்ட சிப்காட் தொழிற்பூங்கா வெற்றிகரமாக செயல்பட்டதன் விளைவாகவும், அப்பகுதியில் சிப்காட் நிறுவனத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என பொதுமக்களிடம் இருந்து ஏராளமான கோரிக்கைகள் வந்ததன் அடிப்படையில், சிப்காட் பகுதியில்-3 தொழில் பூங்கா அமைப்பதற்காக, உரிய ஆணைகள் தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டன. இதில், செய்யாறு வட்டத்தில் மேல்மா மற்றும் அதைச் சுற்றியுள்ள 8 கிராமங்களில் 3,174 ஏக்கர் அளவுக்கு நிலம் கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. நிலம் கையகப்படுத்த முன்மொழியப்பட்ட 3,174 ஏக்கரில் 7 ஏக்கர் மட்டுமே நஞ்சை நிலம் ஆகும்.

விவசாயிகள் போராட்டம் :

தற்போது ​​1,200 ஏக்கர் நிலம் கையகப்படுத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் நஞ்சை நிலம் இல்லை. மேலும், நிலம் கையகப்படுத்த உள்ள 1,881 நில உரிமையாளர்களில், 239 நில உரிமையாளர்கள் மட்டுமே அறிவிப்பு கடிதம் வெளியிடப்பட்ட போது ஆட்சேபனை மனுக்களை அளித்துள்ளனர். சிப்காட் விரிவாக்கம், அங்குள்ள மக்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார மேம்பாடு ஆகியவற்றின் மூலம் இப்பகுதியில் தொழில் வளர்ச்சியை அதிகரிக்கும் நோக்கத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்நிலையில், செய்யாறு வட்டம், மேல்மா கிராமத்தில் பட்டா நிலத்தில். தேத்துறை கிராமத்தைச் சேர்ந்த மேல்மா சிப்காட் விவசாயிகள் போராட்ட இயக்க ஒருங்கிணைப்பாளர் திரு.பச்சையப்பன் தலைமையில், கிராமத்தின் தெற்கு பகுதியில் கொட்டகை அமைத்து, கடந்த 02.07.2023 முதல் தினமும் சுமார் 15 முதல் 20 பேர் வரை தொடர்ந்து மறியல் போராட்டம் நடத்தி வந்தனர்.

Anti-Hooliganism Act - குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் 6 விவசாயிகள் கைது :

04.11.2023 அன்று மெல்மா சிப்காட் விவசாயிகள், அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல், அடிக்கடி சாலை மறியல் செய்தல் மற்றும் பொது அமைதிக்கு இடையூறு ஏற்படுத்துதல், நிலம் கையகப்படுத்துவதற்கு தானாக முன்வந்து சம்மதித்த குடிமக்களை தடுத்து நிறுத்துதல், பணியில் இருந்த காவலர்களை தாக்குதல், பொதுச் சொத்துகளை சேதப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டதால். கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த உழவர் போராட்ட இயக்க நிர்வாகி அருள் மற்றும் 19 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர். இதில், ஏற்கனவே அதிக வழக்குகளில் தொடர்புடைய அருள் மற்றும் 6 பேரை, திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் (Anti-Hooliganism Act) காவலில் வைக்கப்பட்டனர்.

விவசாயிகளை விடுவிக்க ஸ்டாலின் உத்தரவு :

இந்த நிலம் கையகப்படுத்துதல் செய்யாறு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டதால் குண்டர் சட்டத்தில் (Anti-Hooliganism Act) கைது செய்யப்பட்ட பச்சையப்பன், தேவன், சோழன், திருமால், மாசிலாமணி, பாக்கியராஜ் ஆகியோரின் குடும்பத்தினர் (17-11-2023) அன்று செய்யாறு சட்டமன்ற உறுப்பினரை நேரில் சந்தித்து பேசினர். குறித்த நபர்களை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர் செய்யாறு சட்டமன்ற உறுப்பினருடன் வந்து பொதுப்பணித்துறை அமைச்சரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். இது போன்ற அரசு திட்டங்களை வருங்காலத்தில் காரணமின்றி எதிர்க்க மாட்டோம் என்றும், வெளியாட்களின் தூண்டுதலால் இதுபோன்ற தவறுகளை செய்துள்ளோம் என்றும், இனி வரும் காலங்களில் இதுபோன்ற தவறுகளை செய்ய மாட்டோம் என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர். அவரது மனுக்கள் மாண்புமிகு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப்பணித்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தமிழக முதல்வர், செய்யாறு சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து  சட்டம்-ஒழுங்கு முறை, பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் போன்ற செயல்களை செய்த விவசாயிகளின் குடும்பத்தினரின் கோரிக்கையை பரிசீலித்து, அவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தில் (Anti-Hooliganism Act) இருந்து விடுவிக்க உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில், மேற்கண்ட 6 பேர் மீது திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த குண்டர் தடுப்புச் சட்ட உத்தரவு (Anti-Hooliganism Act) வாபஸ் பெறப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Slideshows

Leave a Reply