Chandrayaan-3 In The Final Earth Orbit : ஆகஸ்ட் 1 ஆம் தேதி சந்திரயான்-3 நிலவை நோக்கி பயணிக்கும்…

Chandrayaan-3 In The Final Earth Orbit :

சந்திரயான்-3 விண்கலத்தின் சுற்றுப்பாதை தூரம் 5 வது முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி சந்திரயான்-3 நிலவை நோக்கி பயணிக்கும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

சந்திரயான்-3 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சுமார் ரூ.615 கோடி செலவில் வடிவமைத்துள்ளது. ஜூலை 14ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்விஎம்-3 ராக்கெட் மூலம் விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. இதை தொடர்ந்து பெங்களூருவில் உள்ள இஸ்ரோவின் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து விண்கலத்தின் சுற்றுப்பாதையை நீட்டிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் சந்திரயான்-3 விண்கலத்தின் சுற்றுப்பாதை தூரம் 5வது முறையாக வெற்றிகரமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. சந்திரயான்-3ல் உள்ள உந்துவிசை இயந்திரங்கள் இயக்கப்பட்டு அதன் சுற்றுப்பாதை தூரம் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருவதாகவும் இஸ்ரோ அறிவித்துள்ளது. அதன்படி, விண்கலத்தின் சுற்றுப்பாதை இதுவரை 4 முறை மாற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து 5-வது முறையாக நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் விண்கலத்தின் சுற்றுப்பாதை தூரம் அதிகரிக்கப்பட்டது.

அதன்படி, குறைந்தபட்சம் 236 கி.மீ தூரமும் மற்றும் அதிகபட்சமாக 1 லட்சத்து 27,609 கி.மீ தூரம் கொண்ட சுற்றுப்பாதைக்கு விண்கலம் கொண்டு செல்லப்பட்டது. அடுத்த கட்டமாக, ஆகஸ்ட் 1-ம் தேதி சந்திரயான் விண்கலம் சுற்றுவட்டப்பாதையில் இருந்து விலகி நிலவின் சுற்றுப்பாதையில் தள்ளப்படும். பின்னர் திட்டமிட்டபடி ஆகஸ்ட் 23-ம் தேதி நிலவில் விண்கலம் மெதுவாக தரையிறங்கும் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையில், சிங்கப்பூருக்கு சொந்தமான 7 செயற்கைக்கோள்கள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதல் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி-56 ராக்கெட் மூலம் வணிக ரீதியாக செலுத்தப்பட உள்ளன. இந்த ராக்கெட் ஏவுதலை காண பொதுமக்களுக்கு இஸ்ரோ அழைப்பு விடுத்துள்ளது. விருப்பம் உள்ளவர்கள் https://lvg.shar.gov.in/ என்ற இணையதளத்தில் உடனடியாக முன்பதிவு செய்ய வேண்டும். கூடுதல் விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில் காணலாம் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Latest Slideshows

Leave a Reply