Chandrayaan 3 Sleep Mode : ‘பிரக்யான்’ ரோவரை விழிக்க வைக்கும் தீவிர முயற்சியில்...

Chandrayaan 3 Sleep Mode :

நிலவில் உறக்க நிலையில் இருக்கும் சந்திரயான்-3 விண்கலத்தின் ‘விக்ரம்’ லேண்டர், ‘பிரக்யான்’ ரோவர் கலன்களை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான பணிகளை இஸ்ரோ (ISRO) விஞ்ஞானிகள் முன்னெடுத்துள்ளனர். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ISRO அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தின் ‘விக்ரம்’ லேண்டர், ‘பிரக்யான்’ ரோவர் வாகனம் ஆகியவை கடந்த ஆக.23-ம் தேதி நிலவின் தென்துருவப் பகுதியில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டன. லேண்டர் தரையிறங்கிய இடத்தில் இருந்தபடியும் ரோவரானது நிலவின் மேற்பரப்பில் ஊர்ந்து சென்றும் 14 நாட்கள் ஆய்வு செய்து பல அரிய தகவல்களை நமக்கு அனுப்பிவைத்தன. அதன்மூலம் நிலவின் மேற்பரப்பு வெப்பநிலை, அங்குள்ள தனிமங்கள், நிலஅதிர்வின் தன்மை உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் கண்டறியப்பட்டன.

இதற்கிடையே, நிலவின் தென்துருவப் பகுதியில் இரவு சூழல் வந்துவிட்டதால் ரோவர் லேண்டர் கலன்களின் இயக்கமானது முன்னெச்சரிக்கையாக நிறுத்தி வைக்கப்பட்டு அவை உறக்க நிலையில் (Chandrayaan 3 Sleep Mode) வைக்கப்பட்டன. ஏனெனில் லேண்டர், ரோவர்கலன்கள் சோலார் பேனல்கள் மூலமாக கிடைக்கும் சூரிய ஒளி மின்சக்தியை கொண்டே இயங்கி வருகின்றன. இரவு நேரத்தில் அவற்றால் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாது என்பதால் இரு கலன்களும் முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டு அவை உறக்க நிலைக்கு மாற்றப்பட்டன.

நிலவில் பகல் பொழுது வந்ததும் லேண்டர், ரோவர் கலன்களை செயல்பாட்டுக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று இஸ்ரோ அறிவித்திருந்தது. அதன்படி தென்துருவப் பகுதியில் தற்போது சூரியனின் உதயம் தொடங்கி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் திட்டமிட்டபடி லேண்டர், ரோவர் கலன்கள் இன்று (செப்.22) மீண்டும் உயிர் பெறுமா என அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கின்றனர். அதற்கான முன்னேற்பாடுகளில் தற்போது இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

நிலவில் மைனஸ் 200 டிகிரி குளிர் :

Chandrayaan 3 Sleep Mode : நிலவில் இரவு நேரங்களில் மைனஸ் 200 டிகிரிக்கு மேலாக குளிர்நிலை இருக்கும். அதனால் லேண்டர், ரோவரில் உள்ள சாதனங்கள், இயந்திரங்கள் குளிர்ந்த சீதோஷ்ண சூழ்நிலையில் சேதமடையாமல் மீண்டும் இயங்க வேண்டும். அதற்கான அனைத்து முன்தயாரிப்புகளை இஸ்ரோ செய்திருந்தாலும், அவை முழுமையாக பலன் தரும் என்று கூறமுடியாது.

திட்டமிட்டபடி ரோவர், லேண்டர் ஆகியவை உறக்க நிலையில் இருந்து விழித்தால் அடுத்த 14 நாட்கள் ஆய்வு செய்து பல அரிய தகவல்களை நமக்கு அனுப்பி வைக்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். எனவே ரோவர் மற்றும் லேண்டர் ஆகியவை கடுமையான வானிலையில் இருந்து தப்பித்து மீண்டும் இயங்கவேண்டும் என்பதே விஞ்ஞானிகள், அறிவியல் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாகும்.

Latest Slideshows

Leave a Reply